
இந்தியா அமெரிக்காவுடன் ஏற்படுத்த உள்ள வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை துறை சேர்க்கப்படாது என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களிலும், இரு தரப்பு ஒப்பந்தங்களிலும் இந்தியா இதுவரை வேளாண்மையை சேர்க்காமல் தவிர்த்து வருகிறது. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கு இணையாக உற்பத்தி மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் குறைந்த விலையில் உலக சந்தையில் விளைபொருட்களை விற்கின்றனர்.
மேலைநாடுகளில் உள்ள விவசாயிகள் குறைந்தபட்சம் 500 ஏக்கர் பரப்பளவில் வேளாண்மை செய்கின்றனர்.
இந்தியாவில் 5 ஏக்கருக்கும் குறைவாக வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 92 சதவீதம். இந்தியாவில் உற்பத்தி செய்த உணவுப்பொருட்களுக்கு உரிய விலையும், உற்பத்தி மானியமும் கிடைக்காமல் விவசாயிகள் தொடர் நஷ்டத்தை சந்திக்கின்றனர். வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் ஆண்டுக்கு பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர் என்கிறார் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி.
அவர் கூறியதாவது: இந்தியா தனது வேளாண் சந்தையை அனைத்து நாடுகளுக்கும் திறந்து வைக்க வேண்டும் என்றும் இரு தரப்பு வர்த்த ஒப்பந்தத்த பேச்சு வார்த்தையில் விவசாய பொருட்களை விலக்கி வைக்க முடியாது என்றும் அமெரிக்க வர்த்தக அமைச்சர் கூறுகிறார்.
இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தையில் வேளாண்மை இடம்பெறாது என்று மத்திய அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை இடம்பெறுமானால் அமெரிக்க விவசாய பொருட்கள் இந்திய சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்படும் போது இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றார்.
Read more:
Share your comments