
சீட்டணஞ்சேரியில், காட்டு பன்றிகள் தொடர்ந்து கரும்பு பயிர்களை நாசம் செய்து வருதவதால், அப்பகுதி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பாதி அளவு வளர்ச்சி
உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பாலாற்று பாசனம் மற்றும் ஆழ்த்துளை கிணற்று பாசனம் வாயிலாக பல ஏக்கர் நிலப் பரப்பில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்கின்றனர்.
நடப்பாண்டு பருவத்திற்கு கடந்த ஜனவரியில் நடவு செய்த கரும்பு பயிர்கள் தற்போது பாதி அளவு வளர்ச்சியை எட்டி உள்ளது.
இந்நிலையில், இப்பகுதி கரும்பு தோட்டங்களில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் கூட்டமாக புகுந்து கரும்புகளை கடித்தும் அதன் கூர்மையான மூக்கால் உடைத்தும் நாசம் செய்து வருகின்றன.
இதனால், அக்கரும்புகள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரச்னை
இதுகுறித்து, சீட்டணஞ்சேரி கிராம விவசாயி ரமேஷ் கூறியதாவது,
கரும்பு சாகுபடியில் கட்டுப்படியாகாத விலை, ஆட்கள் தட்டுபாடு என ஏற்கனவே பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதனால், இந்த ஆண்டு ஒரு ஏக்கரில் மட்டும் கரும்பு பயிரிட்டுள்ளேன்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, காட்டு பன்றிகள் ஆங்காங்கே புகுந்து கரும்புகளை நாசம் செய்துள்ளதை கண்டனர்.
ஒரு ஏக்கரில் பாதி அளவு தோட்டத்திற்கான கரும்புகள் காட்டு பன்றிகளால் நாசமாக்கி உள்ளன.
இதேபோன்று பக்கத்து நிலத்தில் பயிரிட்ட குணசேகரன் என்ற விவசாயி கரும்பு தோட்டத்தையும் காட்டு பன்றிகள் சேதப்படுத்தி உள்ளன.
இதனால், கரும்பு சாகுபடியில் மிகுந்த நஷ்டத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
சாகுபடிக்காக வங்கியில் பெற்ற கடன் தொகையை திரும்ப செலுத்த என்ன செய்வதென்ற கவலை ஏற்பட்டு உள்ளது.
காட்டுப் பன்றிகளை விரட்டவோ, கட்டுப்படுத்தவோ, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது விவசாயத்திற்கான நம்பிக்கையை சிதைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Share your comments