News

Wednesday, 12 April 2023 02:55 PM , by: Muthukrishnan Murugan

damaged syphon in Uyyakondan extension canal in Thanjavur

உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாயில் உள்ள சேதமடைந்த சைபானை உடனடியாக நிரந்தரமாக சீரமைக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டத்தை விவசாயிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

திருச்சி அருகே பெட்டவாய்த்தலை அருகே காவிரி ஆற்றில் இருந்து பிரியும் உய்யகொண்டான் வாய்க்கால், தஞ்சாவூர் மாவட்டம் வாழவந்தான் கோட்டையை அடைகிறது. அதன் நீட்டிப்பு கால்வாயின் மூலம் 18 ஏரிகள், பூதலூர் தாலுக்காவில் உள்ள சூரக்குடிப்பட்டி, நாவலூர், ஆவாரம்பட்டி மற்றும் வெண்டையம்பட்டி உள்ளிட்ட 15 கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கர் பாசனம் பெறுகின்றன.

ஆனால், சோலகம்பட்டி காட்டாற்று ஓடையின் குறுக்கே உள்ள சைப்பான், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்த நிலையில், உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாய் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் அனைத்தும் ஏரிகளுக்கு வராமல் ஓடையில் கலந்து வீணாகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள பூதலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 15 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், சோலகம்பட்டி காட்டாற்று ஓடையின் குறுக்கே காவிரி நீர் செல்லும் உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாயில் உள்ள சைபானை உடனடியாக நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 15-ம் தேதி சாலை மறியல் செய்வதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் செவ்வாய்கிழமையன்று அதிகாரிகளுடன் நடைப்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தினை பத்து நாட்களுக்கு ஒத்திவைத்தனர். விளைநிலங்களுக்கு பாசனம் செய்வதற்காக கால்வாய் வழியாக தண்ணீர் செல்வதற்கு நீர்வளத்துறை தற்காலிக ஏற்பாடுகளை செய்த நிலையில், சைபான் முழுமையாக சீரமைக்கப்படாததால், குறிப்பிட்ட பகுதி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய சாகுபடி பணிகளை மேற்கொள்ள நீர் இன்றியமையாத நிலையில் இப்பிரச்சினை அப்பகுதியில் தீவிரமடைந்தது.

இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். சைப்பான் புனரமைப்புக்கான பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீர்வள துறை அதிகாரிகளின் விளக்கம் குறித்து சந்தேகம் தெரிவித்த ராயமுண்டன்பட்டியைச் சேர்ந்த விவசாயியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலருமான என்.வி.கண்ணன், சேதமடைந்த மதகுகளை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

நீர்வளத் துறையின் நதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, 12 கோடி ரூபாய் செலவில் சைபானை புதுப்பிக்கும் திட்டம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

பூதலூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில், பிரச்சினையினை தீர்க்க மேற்கொண்டு என்ன செய்ய முடியும் என்பது குறித்து புதன்கிழமை ஆய்வு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

மேலும் காண்க:

இரக்கம் காட்டாத வெப்ப அலை.. பள்ளி, அங்கான்வாடியை மூட முதல்வர் உத்தரவு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)